Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Wednesday, May 12, 2010

தவறான கதவைத் தட்டியவன்


கதவுகள் திறக்கப் படலாம் அல்லது
தாழ்கள் இறுக்கப் படலாம்
எவ்வாறு இருப்பினும்
தட்டுதல் தவிர்க்கப் படலாமோ?

என்றெல்லாம் எண்ணினேன்...

இறுக்கப் பட்ட தாழ்களுக்கு
திறக்கப் படாத கதவுகளை
தேர்ந்தெடுத் திருக்கலாமென தோன்றுகிறதே...

இன்பத்தைக் காட்டிலும்
அமைதியே முக்கியமென
அறியாமற் போனேனே...


Friday, April 16, 2010

நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்...


அறுப்பு முடிந்த வயற்காட்டில்
அவள் கைபிடித்து ஓடியபோது
காலில் விழுந்த கீறல்களெல்லாம்
இன்றும் தெரிகின்றன
இன்பத்தின் நினைவுகளாய்....

---------------------------------------

என் நெஞ்சமரத்தின் மேல்
கல்லெறிந்தாள் - ஆங்கே
அமர்ந்திருந்த எண்ணப் பறவைகளெல்லாம்
எங்கோ பறந்தோடிப் போயின..
இப்போது கல்லை மட்டும்
வெறித்து பார்த்தவாறு
நிற்கிறது இந்த மரம்.

--------------------------------------

Friday, January 8, 2010

நானும் அவளும் !!!


அவள்
தொடுவானம் !
நான் நெருங்கிச் செல்ல
அவள் விலகிச் செல்கிறாள் !

அவள் பூங்காற்று !
அவளைக் கடந்த பின்னும்
வாசம் என் மனதில் ..

அவள் ஒரு பட்டாம்பூச்சி !
மலர்களில் தேன் திரட்டுவதில்லை
மனங்களில் தேன் தெளிக்கிறாள் !

நான் ஒரு கதவு !
வருவோரை உள்ளே விட்டுவிட்டு
நான் வெளியே நிற்கிறேன் !

நான் ஓர் எறும்பு !
மழைக்காலத்திற்கு உணவைப் போல
பிற்காலத்திற்கு எண்ணங்களைச் சேர்க்கிறேன் !

நான் ஒரு பூக்காம்பு !
வண்டுகள் கவனிக்க
வாய்ப்புகள் குறைவு !

நான் ஒரு மாணவன் - ஆனால்
கடைசி நாளில் தேர்வுக்குப் படிப்பது
காதலில் உதவாது !