Monday, March 1, 2010

இரவு


உண்ணும்
போதே
கண்கள் செருகி
உறங்கி விழும்
குழந்தைகள் ஒருபுறம்!

உறக்கம் என்பதன்
உதவி வேண்டாது
தொலைக்காட்சியில் தொலைந்த
முகங்கள் ஒருபுறம்!

வீடுகளின் வெளியே
பாயில் படுத்தோர்
பேச்சொலி காற்றில்
கலந்த தொருபுறம்!

எண்ணக் குழியை
மூட முடியாமல்
விழித்துக் கிடந்த
முதுமைகள் ஒருபுறம்!

எப்போதேனும் வீசும்
காற்றில் அசைந்தாட
காத்துக் கிடந்த
மரங்கள் மறுபுறம்!

நிசப்தத்தின் நடுவே
பூச்சிகள் புடைசூழ
இருளொடு போரிடும்
தெருவிளக்குக ளொருபுறம்!

இவ்வளவு பேரையும்
இழுத்துக் கொண்டு
மெதுவாக நகர்ந்தது
இரவின் இருட்கரம்!