Tuesday, December 21, 2010

முதல் இரவு


எனக்கு நினைவு தெரிந்த

முதல் நாள் இரவு அன்று !
நட்சத்திரங்கள் யாவும் மெதுவாய்
நகரக் கண்டேன் மேற்காய்

யாரேனும் அவற்றைக்
கூட்டிச் சென்றுவிடுவார்களோ
எனும் கவலையில் காவலிருந்தேன்

விடிய விடிய விண்ணோடு
மறைந்தன விண்மீன்களெல்லாம்.

நட்சத்திரங்களை தொலைத்தவனின்
நாள் நன்றாக இருக்குமா என்ன?
பகலெல்லாம் தவித்தவாறே
திரிந்தது நினைவிருக்கிறது

இப்போதும் கேட்பேன் இரவுகளில்..
'அன்றைக்கு நீங்கள்
சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்
மறுநாள் வருவோம் என்று!'

உலரும் காமம்

பாலைவனக் கிழங்குகளில்
சேகரித்த நீரைப் போல - நீ
எப்போதோ சிரித்த சிரிப்பை
எண்ணிப் பார்த்துக் கொள்கிறேன்.

வெறுமையின் வாசம்
வறண்ட காற்றில் கலந்து பரவ..
உன் முலைகளின் மென்மை மறந்து
உலர்கிறது என் காமம்.