Wednesday, May 19, 2010

நகர்தல்

என் மனம்
நத்தையைப் போல
மெதுவாய் நகர்கிறது

தடை வரும்போது
தன்னுள் சுருங்கிக் கொண்டு
பின் மீண்டும் விரிந்து
முன்னோக்கி செல்கிறது

சற்று கவனம்..
நத்தையின் கூடு ஒன்றும்
அவ்வளவு பலமானது அல்ல.

Thursday, May 13, 2010

நீர்வாழ் நட்பு


கிணற்று நீரின்
குளிர்ச்சிக்கு அஞ்சி
கால்களை மட்டும் நனைத்தவாறு
படிக்கட்டில் உட்கார்ந்த வேளை..

பாதத்தின் அசைவுகள் நின்றதால்
ஆபத்தில்லை யென எண்ணி
என் கால் விரல்களில்
முகத்தை மோதின சில மீன்கள்.

நான் நகராமல் இருந்ததற்கு
கால்கள் சுத்தமானது மட்டும்
காரணம் அல்ல..

என் கால்களை முத்தமிடும்
மீன்களையா விலக்குவது?

அந்த மீன்களின் தூரத்து உறவுகள்
இங்கேயும் இருக்கலாம் என்றெண்ணி
என் கல்லூரி நீச்சல் குளத்தில்
நேற்று கால் நனைத்தேன்.

கால்கள் கூசும் படியாய்
ஏதும் நிகழவில்லை
மறுநாள் சற்று கறுத்திருந்தன கால்கள்
குளோரின் படிந்ததாய்க் கூறினார்கள்.


Wednesday, May 12, 2010

தவறான கதவைத் தட்டியவன்


கதவுகள் திறக்கப் படலாம் அல்லது
தாழ்கள் இறுக்கப் படலாம்
எவ்வாறு இருப்பினும்
தட்டுதல் தவிர்க்கப் படலாமோ?

என்றெல்லாம் எண்ணினேன்...

இறுக்கப் பட்ட தாழ்களுக்கு
திறக்கப் படாத கதவுகளை
தேர்ந்தெடுத் திருக்கலாமென தோன்றுகிறதே...

இன்பத்தைக் காட்டிலும்
அமைதியே முக்கியமென
அறியாமற் போனேனே...